பயங்கரவாதத்தின் மையம் யார் என உலகம் இன்னும் மறக்கவில்லை.. - பாகிஸ்தானுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி..

 
jaishankar


பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் இருப்பதை உலகம் இன்னும் மறக்கவில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.  

அமெரிக்காவில் உள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில்  உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு அணுகு முறை மற்றும் சவால்கள் நோக்கி செல்லும் வழி என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.  இந்தியா தலைமையில் நடைபெற்ற நிகழ்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்  ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.  இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் , அண்மையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜினா ரப்பானி ,  இந்தியாவை விட எந்த நாடும் பயங்கரவாதத்தை சிறப்பாக பயன்படுத்தவில்லை என்று விமர்சித்திருந்தது  குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெய்சங்கர், “ அவர்கள் (பாகிஸ்தான்) சொல்கிறார்கள், உண்மை என்னவென்றால், இன்று உலகம் பயங்கரவாதத்தின் மையமாக அவர்களைப் பார்க்கிறது.

பயங்கரவாதத்தின் மையம் யார் என உலகம் இன்னும் மறக்கவில்லை..  - பாகிஸ்தானுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி.. 

 இந்த பிராந்தியத்தில் மற்றும் பிராந்தியத்திற்கு அப்பால், பயங்கரவாதம் எங்கிருந்து வருகிறது என்பதை உலகம் இன்னும் மறந்து விடவில்லை. எனவே, அவர்கள் கற்பனையில் ஈடுபடுவதற்கு முன்பு தங்களை பற்றி நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் தனது நடவடிக்கையை சரி செய்து, நல்ல அண்டை நாடாக இருக்க பாகிஸ்தான் முயற்சிக்க வேண்டும். இன்னும் எவ்வளவு காலம் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் கடைப் பிடிக்க விரும்புகிறது என்பதை அந்நாட்டு அமைச்சர்கள்தான் உங்களுக்குச் சொல்ல வேண்டும். உலகின் மற்ற நாடுகள் இன்று பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்ற பாதையை நோக்கி செல்கின்றன. பாகிஸ்தானும் வளர்ச்சிக்கு முயற்சி செய்ய வேண்டும்.” என்று தெரிவித்தார்.