ஆங்கிலத்துக்கு மற்றாக இந்தியை ஏற்க வேண்டும்..இது மோடி பிளான்..- அமித்ஷா பேச்சால் சர்ச்சை..
நாட்டில் வெவ்வேறு மொழிகளை பேசும் மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளும் போது ஆங்கிலமாக இல்லாமல் இந்தி மொழியாக இருக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழி குழுவின் 37வது கூட்டத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகித்தார். அப்போது பேசிய அவர், நாட்டின் ஆட்சி மொழியே அலுவல் மொழி என்று பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்திருப்பதாக கூறினார். இது இந்தி மொழியின் முக்கியத்துவத்தை நிச்சயமாக அதிகரிக்க செய்யும் என்றும், அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தி மொழியில் தான் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் , வடகிழக்கு மாநிலங்களில் 22,000-க்கும் மேற்பட்ட இந்தி ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி மொழியின் தொடக்க அறிவைக் கொடுக்க வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்ட அமித்ஷா, இந்தி தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். நாட்டில் வெவ்வேறு மொழிகளை பேசும் மக்கள் ஒருவருக்கொருவர் பேசும் மொழி ஒரே மொழியாக இருக்கும்பட்சத்தில், அது இந்தியாவின் மொழியாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
அதாவது அந்த ஒரே மொழியான ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி மொழியை ஏற்க வேண்டும் என்றும் அமித்ஷா குறிப்பிட்டார். உள்துறை அமித்ஷாவின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தியை திணிக்க நினைத்தால் மீண்டும் இந்தி எதிர்ப்பு போராட்டம் வெடிக்கும் என்றும் பலரும் கூறிவருகின்றனர். #இந்திவேண்டாம்_போடா #StopHindiImposition போன்ற ஹேஷ்டேக்குகளை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.