உச்சநீதிமன்ற வரலாற்றில் இது 3வது முறை.. பெண் நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைப்பு..
உச்சநீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் மட்டுமே அடங்கிய அமர்வு மூன்றாவது முறையாக அமைக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற வரலாற்றிலேயே பெண் நீதிபதிகள் கொண்ட அமர்வு அரிதாக அமைவதுண்டு. அந்தவகையில் தற்போது உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஹிமா கோஹ்லி, நீதிபதி பேலா எம். திரிவேதி ஆகிய பெண் நீதிபதிகள் மட்டுமே அடங்கிய அமர்வை, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அமைத்திருக்கிறார். உச்சநீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் மட்டுமே கொண்ட அமர்வு அமைக்கப்படுவது இதுவே மூன்றாவது முறையாகும். இந்த நீதிபதிகள் அமர்வு முன்பு திருமண தகராறு மற்றும் ஜாமீன் மனு உள்ளிட்ட 32 வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இதற்கு முன்பு, 2013 மற்றும் 2018ம் ஆண்டுகளில் தான் பெண் நீதிபதிகள் மட்டுமே அடங்கிய அமர்வு அமைக்கப்பட்டது. 2013ல் நீதிபதிகள் கியான் சுதா மிஸ்ரா மற்றும் ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் அமர்வில் இருந்தனர். அதேபோல் 2018ம் ஆண்டில் நீதிபதிகள் ஆர். பானுமதி மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோர் பெண் நீதிபதிகள் மட்டுமே இருந்தனர்.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் 34 நீதிபதிகள் தேவை இருக்கிறது. ஆனால் தற்போது 27 நீதிபதிகளே உள்ளனர். உச்சநீதிமன்றத்தில் தற்போது நீதிபதி ஹிமா கோஹ்லி, நீதிபதி பேலா எம். திரிவேதி, நீதிபதி பி.வி. நாகரத்னா ஆகிய மூன்று பெண் நீதிபதிகள் இருக்கின்றனர். அவர்களுள், 2027 ம் ஆண்டில் நீதிபதி பி.வி. நாகரத்னா ‘நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதி’ என்ற பெருமையை அடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.