காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படை வீரர்கள் அதிரடி வேட்டை

 
kashmir

காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச்சூடு சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 
 
காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் இன்று காலை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் சோபியான் மாவட்டம் சைனாபுரா நகரில் முன்ஜா மர்க் என்ற பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். 

உடனடியாக சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படை வீரர்க்ள் அப்பகுதியை சுற்றிவளைத்த பதிலடி தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே சில மணி நேரம் துப்பாக்கிச்சண்டை நீடித்தது. இந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளும் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த பகுதியில் வேறு பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனரா என பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.