லாரி - பேருந்து மோதி விபத்து : 12 பேர் பரிதாப பலி..
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் கண்டெய்னர் லாரி மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டு 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் அவுரங்காபாத் சாலையில் அதிகாலை 5 மணியளவில் பயணிகளை ஏற்றி கொண்டுச் சென்ற பஸ் ஒன்று லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில், பலர் காயமடைந்த நிலையில், விபத்தில் சிக்கிய பேருந்தும் தீப்பிடித்துக் கொண்டது. தீ மளமளவென பேருந்து முழுவதும் பற்றி எரிய தொடங்கியதால், பேருந்துக்குள் சிக்கிய பயணிகள் பலரும் வெளியே வர முடியாமல் சிக்கித்தவித்தனர். லாரி- பேருந்து மோதிய விபத்து மற்றும் தீயில் சிக்கி ஒரு குழந்தை உட்பட 12 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் காயமடைந்த 32 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து தீ பிடித்து எரிந்தது குறித்த தகவலின்பேரில் நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்நிலையில் பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.