ஜம்மு காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

 
kashmir

ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படை விரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் இடையே நடந்த துப்பாக்கிச்சூடு சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டம் தங்பாவா பகுதியில் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அதிகாரிகளின் உத்தரவின் பேரில் பாதுகாப்பு படை வீரர்கள் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த தங்பாவா பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படை வீரர்களை பார்த்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனை உடனடியாக சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். நேற்று மாலை தொடங்கிய துப்பாக்கிச்சூடு சண்டை இன்று அதிகாலை வரை நீடித்தது. இந்த அதிரடி தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். துப்பாக்கிச்சூட்டில் பலியான பயங்கரவாதிகள் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. அவர்களை அடையாளம் காணும் பணி நடை பெற்று வருகிறது. மேலும், அந்த பகுதியில்  வேறு ஏதும் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கிறார்களா? என பாதுகாப்பு படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.