நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2வது அமர்வு: இரு அவைகளும் ஒரே நேரத்தில் தொடங்கியது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்ட அமர்வு இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.
மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரானது கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு துரை சார்ந்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. அதன்பின்னர் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதமும், இறுதியாக விவாதத்துக்கு பிரதமர் மோடி பதிலுரையும் இடம்பெற்றது. இதனையடுத்து, பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்ட அமர்வு கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
முதல் அமர்வின்போது கொரோனா பரவல் காரணமாக காலையில் மாநிலங்களவையும், மாலையில் மக்களவையும் செயல்பட்டன. இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று ( திங்கள் கிழமை ) தொடங்கியிருக்கிறது. தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து காணப்படுவதால் நாடாளுமன்ற இரு அவைகளும் வழக்கம் போல் காலை 11 மணிக்கு ஒரே நேரத்தில் தொடங்கியுள்ளது.
இந்த அமர்விலும் பல முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. உக்ரைனில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பட்ஜெட்டுக்கான நாடாளுமன்ற ஒப்புதலைப் பெறுவது, காஷ்மீருக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வது உள்ளிட்டவையும் இடம்பெறும் என கூறப்படுகிறது.
அதேநேரம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் குறைக்கப்பட்டது, உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்டதில் தாமதமானது, வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு, உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் எதிர்காலம் உள்ளிட்ட பிரச்சனைகள் எழுப்பில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.