இனி நீட், ஜெ.இ.இ, கியூட்-னு தனித்தனி தேர்வு இல்லை..- ஒரே நாடு, ஒரே நுழைவுத் தேர்வை நடத்த மத்திய அரசு பரிசீலனை..

 
இனி  நீட், ஜெ.இ.இ, கியூட்-னு தனித்தனி தேர்வு இல்லை..- ஒரே நாடு, ஒரே நுழைவுத் தேர்வை நடத்த மத்திய அரசு பரிசீலனை..

இந்தியாவில் மருத்துவம், பொறியியல் ஆகிய படிப்புகளுக்கு  ஒரே நிழைவுத் தேர்வை நடத்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.  

இந்தியாவில் 3 பொது நுழைவுத் தேர்வுகளின் அடிப்படியில் உயர்க்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதில்  மருத்துவ படிப்புகளில் 'நீட்' என்னும் பொது நுழைவுத்தேர்வும்,   என்.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.ஐ.டி. உள்ளிட்ட குறிப்பிப்பிட்ட சில தொழில்நுட்ப நிறுவனங்களில்  சேருவதற்கு ஜே.இ.இ. மெயின் தேர்வும்,   ஐ.ஐ.டி. மாணவர் சேர்க்கைக்கு ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வும் நடத்தப்படுகிறது. மூன்றாவதாக 45 மத்திய பல்கலைக்கழகங்கள் உள்பட 90 பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்ட படிப்பு மாணவர் சேர்க்கைக்கு ‘கியூட்’எனப்படும்  நுழைவுத் தேர்வும் நடத்தப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க மற்றொரு விஷயம் என்னவென்றால், இந்த தேர்வுகள் அனைத்தும் என்.டி.ஏ. என அழைக்கப்படும் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படுகிறது

நீட் தேர்வு

இந்த நிலையில் நீட், ஜே.இ.இ. மெயின் நுழைவுத்தேர்வுகளையும் தற்போதுள்ள 'கியூட்' என்று அழைக்கப்படுகிற பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வுடன் (இளநிலை) இணைக்க மத்திய  அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.  இந்த ஒருங்கிணைந்த பொது நுழைவுத்தேர்வினை அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு கொண்டு வரவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் எம்.ஜெகதீஷ் குமார் கூறியுள்ளார். இந்த 3 நுழைவுத் தேர்வுகளையும் எழுதுகிற மாணவர்கள் பெரும்பாலும் பொதுவானவர்கள் என்பதால்,  உயர்கல்வி படிப்பதற்காக பல்வேறு நுழைவுத்தேர்வுகளை எழுதுகிற சுமையை இது குறைக்க  ஒரே நாடு ஒரே நுழைவுத்தேர்வை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.  

நீட் தேர்வு

அத்துடன்   2020-ம் ஆண்டின் தேசிய கல்வி கொள்கையும் ஒரே நாடு, ஒரே நுழைவுத்தேர்வு என்ற அம்சத்தை கொண்டுள்ளதாக கூறினார்.  நீட்' தேர்வுக்கு உயிரியல், இயற்பியல், வேதியியல் பாடங்கள் கட்டாயம். அதேபோல்  ஜே.இ.இ.மெயின் தேர்வுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்கள் அவசியம்.  இந்த பாடங்கள் அனைத்தும்  ஏற்கனவே 'கியூட்'டில் உள்ளதால்,   மருத்துவம், பொறியியல்  மாணவர் சேர்க்கைக்கு 'கியூட்' தேர்வு மதிப்பெண்களை பயன்படுத்துவதில் பிரச்சினை எதுவும் இருக்காது என்கின்றனர். மேலும்,  இது தொடர்பாக  அனைத்து தரப்பினரிடமும் கல்வி அமைச்சகமும், பல்கலைக்கழக மானியக்குழுவும் விவாதிக்க தொடங்கி உள்ளதாகவும்,   மேல்நிலைப்பள்ளி தேர்வுகள் முடிந்ததும் முதல் அமர்வு தேர்வும்,   நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் மற்றொரு தேர்வும் என ஆண்டுக்கு 2 முறை  இந்த தேர்வு   நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.