பிரதமர் மோடியின் தாயார் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள் - மம்தா பானர்ஜி
பிரதமர் மோடியின் தாயார் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பிரதமர் மோடியின் தயார் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிரதமர் மோடி தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு மருத்துவமனை சென்று தாயை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் மருத்துவர்களிடம் தாயின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இதனிடையே பிரதமர் மோடியின் தாயார் விரைவில் குணமடைய விரும்புவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் தாயார் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் விரைவில் குணமடையவும் நல்ல ஆரோக்கியமாக இருக்கவும் பிரார்த்தனை செய்யுங்கள், அவர் விரைவில் குணமடையட்டும்" என்று கூறியுள்ளார்.


