16 லட்சத்திற்கும் அதிகமான பயனர்களின் கணக்கிற்கு தடை விதித்த வாட்ஸ் ஆப்..
இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் 16 லட்சத்திற்கும் அதிகமான பயனர்களின் வாட்ஸ் ஆப் கணக்குகளை முடக்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ் அப் இருந்து வருகிறது. தகவல் பரிமாற்றம், புகைப்படம், வீடியோ, டாக்குமென்ட்களை அனுப்புவது, வீடியோ கால், ஆடியோ கால் , பணப்பரிமாற்றம் என அனைத்து வசதிகளும் வாட்ஸ் ஆப்பில் இருக்கின்றன. பல நிறுவனங்களும் வாட்ஸ் ஆப்பை ஆதாரமாக வைத்து செயல்பட தொடங்கிவிட்டன. அதேநேரம் வாட்ஸ் ஆப்பில் தீங்கு விளைவிக்கும் செயல்களும் அதிகரிக்கின்றன. அதனை தடுக்கும் விதமாக அத்தகைய கணக்குகளை வாட்ஸ் அப் முடக்கி வருகிறது.
அந்தவகையில் ஏப்ரல் மாதம் மட்டும் 16 லட்சத்திற்கும் அதிகமான பயனர்களின் கணக்குகளை முடக்கியுள்ளதாக வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது, இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாட்ஸ்அப் பயனர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் நிறுவனம் 122 கணக்குகளை தடை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதேபோல் வாட்ஸ் அப்பில் தீங்கு விளைவிக்கும் செயல்பாட்டைத் தடுப்பதற்காக 16.66 லட்சம் பயனர்களின் கணக்குகளைத் தடை செய்துள்ளதாகவும், குற்றம் நடைபெறுவதை தடுப்பதில் வாட்ஸ் ஆப் நிறுவனம் கவனம் செலுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஏனென்றால் தீங்கு ஏற்பட்ட பிறகு அதைக் கண்டறிவதை விட, தீங்கு விளைவிக்கும் செயலை முதலில் தடுப்பது மிகவும் சிறந்தது என்றும், அதற்காகவே முன்கூட்டியே தீங்கு விளைவிக்கும் பயனர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வாட்ஸ் ஆப் கூறியுள்ளது.