"பாலக்கோடு தாக்குதல் நினைவிருக்கிறதா? பயங்கரவாதிகளுக்கு மரண அடி" - யோகி பெருமிதம்!
2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை எவராலும் மறக்க முடியாது. இந்தத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் படை வீரர்கள் 40 பேர் வீரமரணமடைந்தனர். இதற்கு ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக பிப்ரவரி 26ஆம் தேதி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத முகாம் மீது இந்திய விமானப்படை குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.
பாலக்கோடு தாக்குதல் என அறியப்படும் இந்தத் தாக்குதலில் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பாகிஸ்தான் அரசும் இதனை ஒப்புக்கொண்டது. இந்த தாக்குதல் நடந்த சமயம் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்ற இந்திய ராணுவ விமானத்தை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அந்த விமானத்தில் இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய விமானி அபிநந்தன் பாராசூட் மூலம் தப்பிய நிலையில் எதிர்பாராத விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தார். இதற்குப் பின் பாகிஸ்தான் ராணுவம் அவரைச் சிறைப்பிடித்தது.
இந்தியா மற்றும் மற்ற உலக நாடுகளின் கடும் அழுத்தத்திற்குப் பின் அபிநந்தனை நல்லெண்ண அடிப்படையில் எவ்வித நிபந்தனையுமின்றி விடுவிப்பதாக பாகிஸ்தான் அறிவித்து. மார்ச் 1ஆம் தேதி இந்தியாவிற்கு அவர் திரும்பினார். அபிநந்தன் தாயகம் திரும்பும் வரையில் இந்தியர்கள் அனைவருமே பதற்றத்துடனே இருந்தனர். இந்த வரலாறை அசைபோடாமல் யாராலும் அவ்வளவு எளிதில் கடந்தவிட முடியாது. இந்த பாலக்கோடு தாக்குதல் நிகழ்ந்து இன்றோடு மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ளது.
'बालाकोट एयर स्ट्राइक' की तृतीय वर्षगांठ पर 'भारतीय वायु सेना' के असाधारण शौर्य और पराक्रम को नमन है।
— Yogi Adityanath (@myogiadityanath) February 25, 2022
हमारे सैनिकों की यह वीरता, दुश्मन की धरती पर पल रहे आतंकियों के सीने पर वह अमिट प्रहार है, जिसे सदैव गर्व से याद किया जाएगा।
जय हिंद!@IAF_MCC
இதனையொட்டி உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனது ட்விட்டரில் இந்திய விமானப் படையின் வீரத்தைப் பறைசாற்றியுள்ளார். அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "பாலக்கோடு விமான தாக்குதலின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளில் இந்திய விமானப்படையின் அசாத்தியமான வீரத்திற்கு நான் இன்றும் தலைவணங்குகிறேன். நமது வீரர்களின் வீரம், எதிரி மண்ணில் வாழும் பயங்கரவாதிகளின் நெஞ்சில் வீசிய ஈட்டியைப் போன்றது. அந்த வடுவை என்றைக்கும் அழியாத முடியாதபடி இந்திய வீரர்கள் மரண அடி கொடுத்தனர். இதனை நாம் எப்போதும் பெருமையுடன் நினைவுகூர வேண்டும். ஜெய் ஹிந்த்!” என குறிப்பிட்டுள்ளார்.