பெரும் சோகம்! தெருநாய்கள் கடித்து குதறியதில் 12 வயது சிறுவன் உயிரிழப்பு!

 
lot of dog attack

உத்தரபிரதேச மாநிலத்தில் தெருநாய்கள் கடித்து குதறியதில் 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் உள்ள கானா கவுந்தியா பகுதியில் சிறுவர்கள் சிலர் ஒன்றாக சேர்ந்து தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சுற்றித்திரிந்த தெருநாய்கள் திடீரென அந்த சிறுவர்களை துரத்தி தாக்க தொடங்கினர். அந்த தெரு நாய்கள் ஆக்ரோஷத்துடன் சிறுவர்களை துரத்திய நிலையில், அந்த சிறுவர்கள் நாய்களிடம் இருந்து தப்பிப்பதற்காக அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதில் அயான் என்ற 12 வயது சிறுவன் நாய்கள் துரத்திய போது எதிர்ப்பாரத விதமாக கீழே விழுந்தான். உடனடியாக தெருநாய்கள் அந்த சிறுவனை கீழே போட்டு கடித்து குதறின. 

இந்நிலையில், அந்த வழியாக சென்றவர்கள், சிறுவனை நாய்களிடமிருந்து மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் சிறுவன் அயான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். நாய்கள் தாக்கியதில் மேலும் ஒரு குழந்தை காயமடைந்த நிலையில், அந்த சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பரேலியில் தெருநாய்கள் குழந்தைகளைத் தாக்குவது இது முதல் முறையல்ல. இரண்டு மாதங்களுக்கு முன்பு வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுமி தெருநாய்கள் தாக்கியதில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.