கேரளாவில் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து..
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள துணிக்கடை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில், பல கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாகி உள்ளன.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்ட நகர் பகுதியில் 3 மாடிகளைக் கொண்ட பிரம்மாண்ட துணிக்கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த துணிக்கடையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடையில் இருந்து புகைமூட்டம் அதிகமாக வெளியேறி கடுமையாக தீ கொழுந்து விட்டு எரிவதை பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து கோழிக்கோடு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து பல்வேறு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மூன்று மாடிகளிலும் அதிக அளவில் தீப்பற்றி எரிந்து புகை வெளியேறிய வண்ணம் இருந்ததால் தீயை அணைப்பது தீயணைப்பு வீரர்களுக்கு கடும் சவாலானது. இந்த தீ விபத்தில் துணிக்கடைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் முழுவதுமாக எரிந்து நாசமாகின. தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தீ அணைக்கப்பட்ட பின்னரே தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவரும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பின்னரே தீ விபத்தில் எவ்வளவு சேதம் ஏற்பட்டுள்ளது, எத்தனை கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசமாகியுள்ளது என்பது குறித்த விவரங்கள் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.