ஆய்வை தொடங்கியது ஆதித்யா எல்-1

 
tn

 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து,  சூரியனை ஆய்வு செய்வதற்காக ‘ஆதித்யா எல்-1’என்ற விண்கலத்தை ஏவியது.  ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த 02ம் தேதி  பகல் 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம்  ஆதித்யா விண்கல விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் திட்டமிட்டபடி இலக்கை அடைய 4 மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது.

aditya l1

 100-120 நாட்கள் பயணித்து ஆதித்யா L1 விண்கலம் சூரியனின் சுற்றுவட்டப்பாதையை அடைந்து, சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சு, சூரிய கதிர்கள், அதன் காந்தப்புலங்கள், உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆதித்யா எல்.1 விண்கலம் வெற்றிகரமாக புவியின் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டதை தொடர்ந்து சுற்றுவட்ட  பாதையின் உயரம் உயர்த்தப்பட்டது. பின்னர் கடந்த 5-ஆம் தேதி  2-வது முறையாகவும், 10 தேதி மூன்றாவது முறையாகவும் சுற்றுவட்டப் பாதையின் உயரம் அதிகரிக்கப்பட்டது. 

aditya l1

இந்நிலையில் சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம் அறிவியல் தரவுகளை சேகரிக்க தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.  STEPS கருவி சென்சார்கள் பூமியில் இருந்து 50,000 கிமீ தொலைவில் உள்ள அயனிகள், எலக்ட்ரான்களை ஆய்வு செய்கிறது. இந்த தரவுகள் விஞ்ஞானிகள் பூமியை சுற்றியுள்ள துகள்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய உதவுகிறது.  இதை தொடர்ந்து 15ஆம் தேதி ஆதித்யா எல்.1 விண்கலம் வெற்றிகரமாக புவியின் நான்காவது சுற்றுவட்டப் பாதைக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்தது.