3 நிமிடங்களில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு!

 
parliament

தொடங்கிய 3 நிமிடங்களில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.   ராகுல்காந்தி தகுதி நீக்கம் குறித்து விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி எம்.பிக்கள் முழக்கம் எழுப்பிய நிலையில்  மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.  

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த  மார்ச் 13ம் தேதி தொடங்கியது.  நடாளுமன்ற இரண்டாவது அமர்வு தொடங்கிய நாள் முதல் இதுவரை  எந்த ஆக்கப்பூர்வ நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் முடங்கியுள்ளது.  கடந்த வாரங்களில் அதானி விவகாரம் குறித்து காங்கிரஸ் கேள்வியெழுப்பி அமளியில் ஈடுபட்டு வந்தனர். அவர்களுக்கு  ஈடுகொடுக்கும் விதமாக ராகுல் காந்தி பிரான்ஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டி குறிப்பிட்டு,  அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி பாஜக எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.  

Parliament

இதனால் அவை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தது.  அதன்பின்னர் ராகுல்காந்தி எம்.பி., பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து  காங்கிரஸ்  உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமையன்று மக்களவையில் மூன்று மசோதாக்களையும், மாநிலங்களவையில் இரண்டு மசோதாக்களையும் அறிமுகப்படுத்தி அதன் மீது விவாதம் நடத்த அரசு தரப்பில் திட்டமிடப்பட்டிருந்தது.   எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கத்தால் , இரு அவைகளும் இன்றைக்கு ( ஏப்ரல் 3 ) ஒத்திவைக்கப்பட்டது.

சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பின்னர்  இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற இரு அவைகளும் கூடின.    நாடாளுமன்றம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே  எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ராகுல் தகுதி நீக்கம் குறித்து  விவாதிக்கக்கோரி முழக்கம் எழுப்பினர்.  இதனால் மக்களவை, மாநிலங்களவை  இரண்டும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.  13வது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும்  ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.