எதிர்க்கட்சிகள் கடும் அமளி - நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

 
Parliament

அதானி குழும முறைகேடு குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதை அடுத்து இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் நிறுவனம், அதானி குழுமத்தை பற்றி சமீபத்தில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், பங்குச் சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயா்த்திக் காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி இருந்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்த குற்றச்சாட்டின் தாக்கத்தால் அதானியின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன. இதனால் அவரது சொத்து மதிப்பில், 7.44 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தனர். இதனையடுத்து இன்று காலை இரு அவைகளும் கூடியவுடன் அனைத்து நடவடிக்கைகளையும் ஒத்திவைத்துவிட்டு அதானி குழும முறைகேடு குற்றச்சாட்டு குறித்து உடனடியாக விவாதிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை இரு அவைகளின் தலைவர்களும் ஏற்க மறுத்ததை தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பகல் 2 மணிவரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.