மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம்! அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்பு
மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக பதவி ஏற்றார் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வந்தது. இந்த சூழலில் மூத்த அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, தனக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏக்களை, தன் பக்கம் இழுத்து, பாஜகவுடன் இணைந்து மாநிலத்தின் முதலமைச்சரானார். அதேபோல் மகாராஷ்டிராவின் பலம் வாய்ந்த கட்சிகளில் ஒன்றான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாருக்கும், அவரது கட்சியின் முக்கியத் தலைவர்களின் ஒருவருமான அஜித் பவாருக்கும் இடையே பூசல் நிலவி வந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் சரத் பவாரின் NCP கட்சி உடைந்தது. அந்த கட்சியின் கிட்டத்தட்ட 3/4 பங்கு சட்டமன்ற உறுப்பினர்களுடன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார் அஜித் பவார். சரத் பவருக்கு மிக நெருக்கமான ப்ராஃபுல் பட்டேல் போன்றோரும் பிரிந்து வந்தனர். பட்னாவில் நடந்த கூட்டத்தில் சரத் பவார் ராகுல் காந்தியுடன் இணைந்து பிரதமர் மோடியை வீழ்த்த பேச்சுவார்த்தை நடத்தியது அக்கட்சியின் உறுப்பினர்களுக்கு அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது என கூறப்படுகிறது.
இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் சரத்பவார் அக்கட்சியில் இருந்து தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 29 பேருடன் ஷிண்டே அரசுக்கு அஜித் பவார் ஆதரவு தெரிவித்துள்ளார். ஏற்கனவே பட்னாவிஸ் துணை முதல்வராக உள்ள நிலையில் அஜித் பவாரும் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அஜித் பவார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 8 பேருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். பதவியேற்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார், "மகாராஷ்டிராவின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபடுவோம். அதனால்தான் இந்த முடிவை எடுத்துள்ளோம். அனைத்து தேர்தல்களிலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி பெயரிலேயே போட்டியிடுவோம்" எனக் கூறினார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, “மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்காக, அஜித் பவாரையும் அவரது ஆதரவாளர்களையும் வரவேற்கிறேன். அஜித் பவாரின் அனுபவம் மகாராஷ்டிராவை வலுப்படுத்தும்” என்றார்.