தூக்கு தண்டனைக்கு மாற்றுவழி : குழு அமைப்பு
தூக்கு தண்டனைக்கு மாற்று வழியை கண்டறிய நிபுணர் குழு அமைக்க முடிவு என தூக்கு தண்டனையை கைவிடக் கூடிய வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
தூக்கு தண்டனைக்கு மாற்றாக வேதனை குறைந்த வகையில் மரண தண்டனை நிறைவேற்றுவது குறித்து ஆராய மத்திய அரசு குழு ஒன்றை அமைக்க உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தலைமை வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார். மரண தண்டனை குற்றவாளிகளுக்கு வலியற்ற தண்டனை கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜராகிய மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் ஆர். வெங்கட்ரமணி இது குறித்து ஆராய குழு ஒன்று அமைப்பதாக தெரிவித்தார். மத்திய அரசின் பதிலை ஏற்ற உச்ச நீதிமன்றம் இவ்வழக்கினை ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்தியாவில் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்படும் நிலையில் கருணை மனுக்கள் மூலம் அவர்களுக்கான தண்டனை தாமதம் ஆகிறது. இதனால் கருணை மனுக்களை பரிசீலிப்பதில் மாநில அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்று சமீபத்தில் வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். கருணை மனுக்களை பரிசீலிப்பதில் நீண்ட தாமதம் ஏற்படுவதன் காரணமாக மரண தண்டனை குற்றவாளிகள் தங்களுக்கு இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்வதாகவும் சமீபத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியிருந்தனர் என்பது கவனிக்கத்தக்கது.