இந்தியாவிலேயே நம்பர் 1... 100% தடுப்பூசி டார்கெட் ஃபினிஷ் - அசத்தும் அந்தமான்!
கொரோனா 2ஆம் அலையில் இந்தியாவின் நிலை எப்படி இருந்தது என அனைவருமே அறிவர். ஜூலை மாதத்திலிருந்து அதன் பரவல் வேகம் குறைந்துவந்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மூன்றாம் அலை வருவதற்குள் நாட்டில் 50% மக்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசிகளாவது போட வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தினர். தற்போது ஒமைக்ரான் கொரோனாவால் ஜனவரி, பிப்ரவரியில் மூன்றாம் அலை வேறு வருவதற்கான அறிகுறிகள் சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
நாடு முழுவதும் 100% என்ற தடுப்பூசி தன்னிறைவை எட்டுவதற்கு இன்னும் இரு வருடங்கள் கூட ஆகலாம். இருப்பினும் குறிப்பிட்ட கிராம ஊராட்சி நிர்வாகமும் மாநகராட்சி நிர்வாகமும் மக்களிடையே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவித்து வருகின்றன. குறைவான மக்கள்தொகை கொண்ட யுனியன் பிரதேச அரசுகளும் மத்திய அரசுடன் இணைந்து தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுப்படுத்தியுள்ளன.
அந்த வகையில் இந்தியாவின் யுனியன் பிரதேசங்களில் ஒன்றான அந்தமான் நிக்கோபர் தீவுகள் 100 சதவீத தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளது. அதாவது அங்குள்ள அனைவருக்குமே இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட 2.86 லட்சம் பேர் 2 டோஸ் தடுப்பூசியையும் எடுத்துக்கொண்டுள்ளதாக அந்தமான யுனியன் பிரதேச நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலுள்ள மாநிலங்கள் மற்றும் யுனியன் பிரதேசங்களில் 100% இலக்கை அடைந்த முதல் யுனியன் பிரதேசம் என்ற சாதனையையும் படைத்துள்ளது.
அந்தமானில் யாருக்குமே கோவாக்சின் போடப்படவில்லை. கோவிஷீல்டு தடுப்பூசிகளைச் செலுத்தி மட்டுமே இச்சாதனையைப் புரிந்துள்ளது அந்தமான். 800 கிமீ தொலைவில் உள்ள 836 தீவுகளை உள்ளடக்கிய தீவுக்கூட்டம், கடல், மிகவும் அடர்ந்த காடு, மலைகள் மற்றும் சீரற்ற காலநிலை என அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தியது நிச்சயம் பாராட்டுதலுக்குரியது. அந்தமானின் மொத்த மக்கள்தொகையில் 74.67% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்கள் குழந்தைகள், தடுப்பூசி விலக்கு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.