தமிழ்நாட்டை கட்டம் கட்டும் ஒமைக்ரான்... ஆந்திராவில் முதல் தொற்று பதிவு!
டெல்டா கொரோனாவால் இந்தியாவில் இரண்டாம் அலை ஏற்பட்டது. நாடு கடும் விளைவுகளைச் சந்தித்தது. இச்சூழலில் டெல்டாவை விட வேகமாகப் பரவக்கூடிய ஒமைக்ரானால் 3ஆம் அலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் மேலோங்கியுள்ளது. மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். மும்பையில் இதுவரை 17 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் பாதிக்கும் மேற்பட்டோர் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். அதேபோல் இன்னும் சிலரின் பயண வரலாறே தெரியவில்லை. இதனால் அவர்களால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு மும்பையில் 144 தடை உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று தலைநகர் டெல்லியில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. அவர் ஜிம்பாப்வே நாட்டிலிருந்து வந்தவர். 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர். இதுதவிர ராஜஸ்தானில் ஒன்பது பேரும் குஜராத்தில் மூன்று பேரும் கர்நாடகாவில் இரண்டு பேரும் பாதிக்கப்பட்டிருந்தனர். இச்சூழலில் தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான ஆந்திராவில் முதல் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அயர்லாந்திலிருந்து மும்பை வழியாக விசாகப்பட்டினம் வந்த 34 வயதான நபருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 27ஆம் தேதி ஆந்திராவுக்கு வந்த அந்த நபர் தற்போது தொற்றிலிருந்து மீண்டுவிட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் முதன்முறையாக மற்றொரு அண்டை மாநிலமான கர்நாடகாவில் தான் இருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டது. தமிழ்நாட்டை சுற்றி ஒமைக்ரான் கட்டம் கட்டியுள்ளது. கேரளா மட்டுமே பாக்கி. ஆகவே அண்டை மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்களை கூடுதல் விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.