28 நாட்கள் சிறைவாசம்... ஜாமீனில் வெளியே வந்தார் ஆர்யன் கான்!

 
ஆர்யன் கான்

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக கடந்த 3ஆம் தேதி பிரபல நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். ஆர்யன் கான் உட்பட 8 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைத்தனர்.

ஆர்யன் கான்

அதற்கு முன்னதாகவே ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இரண்டு முறை அவர்களது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து மும்பை ஐகோர்ட்டில் ஜாமீன் கோரி அவர்கள் மேல்முறையீடு செய்தனர். இரண்டு நாட்களாக ஆரியன் கானின் ஜாமீன் மனு விசாரணை செய்யப்பட்ட நிலையில், மும்பை ஐகோர்ட் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கியது. அவருக்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டது.

ஆரியன் கானுக்கு நேற்று ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் அவர் நேற்றே விடுதலை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. அதற்கு விளக்கமளித்த சிறைச்சாலை அதிகாரிகள், ஆர்யன் கான் நாளை தான் விடுதலை செய்யப்படுவார் என்று தெரிவித்தனர். அதன் படி,  28 நாட்களுக்கு ஆர்தர் ரோடு சிறையில் இருந்து ஆர்யன் கான் இன்று வெளியே வந்தார்.