உச்ச நீதிமன்றத்தில் கைகூப்பி மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்
பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் டூத் பேஸ்ட் , சோப்புகள் , தேன் , ஷாம்பு உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்த பொருட்கள் தீராத நோய்களையும் குணப்படுத்துவதாகவும் விளம்பரம் செய்யப்பட்டன. இந்த பொருட்களுக்கான விளம்பரங்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய மருத்துவ சங்கம் உச்ச நீதிமன்றத்தை நாடியது. குறிப்பாக பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரங்களில் அலோபதி மருத்துவ முறைக்கு எதிரான கருத்துகளும் இருந்தன. இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் வழக்கை விசாரித்த நீதிமன்றம் பதஞ்சலி நிறுவனத்தை கடுமையாக எச்சரித்தவுடன் எந்த ஒரு தவறான விளம்பரங்களையும் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தியது.

இருப்பினும் பதஞ்சலி நிறுவனம் இது போன்ற விளம்பரங்களை நிறுத்தவில்லை. இதைத்தொடர்ந்து வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்த நிலையில் பதஞ்சலியின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதற்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அத்துடன் அதன் நிர்வாக இயக்குனர் பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸ் குறித்து பதிலளிக்காத நிலையில் பதஞ்சலி நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் கடுமையான கண்டனத்தை தெரிவித்தது. இதையடுத்து நோட்டீஸ் குறித்து பதிலளித்த பதஞ்சலி நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.
அத்துடன் பதஞ்சலின் மருந்து பொருட்களின் தவறான விளம்பரத்திற்காக உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறியதற்காக பாபா ராம்தேவ் உச்சநீதிமன்றத்தில் நிபந்தனை அற்ற மன்னிப்பு கூறினார். ஆனால் அவரின் மன்னிப்பை ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றத்தை ராம்தேவ் மற்றும் பால்கிருஷ்ணன் கைகூப்பி ஒப்புக்கொண்டனர். மேலும் ஊடகங்களில் தங்கள் நடத்தைக்காக பகிரங்க மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாகவும் உச்ச நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டனர்.


