விருந்தில் நல்லி எலும்பு இல்லாததால் திருமணத்தை ரத்து செய்த மாப்பிள்ளை வீட்டார்
தெலங்கானாவில் நிச்சியதார்த்தம் பிறகு நடந்த விருந்தில் நல்லி எலும்பு இல்லை என்பதால் திருமணத்தை ரத்து செய்து கொண்ட மாப்பிள்ளை வீட்டாரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை ஜகித்யாலா மாவட்டம் மெட்பள்ளி மண்டலத்தைச் சேர்ந்த இளைஞருக்கு திருமணம் செய்ய பெரியோர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக பெண் வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்தது. பின்னர் திருமணத்திற்காக பெண்னிற்கு வழங்க வேண்டிய வரதட்சணை உள்ளிட்டவை பேசி முடித்து கொண்டு இறுதியாக விருதுக்கு சென்றனர். அப்போது பெண்ணின் வீட்டில் இறைச்சியுடன் கூடிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உணவில் மட்டன் நல்லி எலும்பு வேண்டும் என மணமகன் வீட்டு உறவினர் கேட்டனர். இதற்கு எலும்பு இல்லை எனக்கூறவே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலில் முடிந்தது. இதனால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் இரு வீட்டாரையும் சமாதானப்படுத்த முயன்று ஏற்க மறுத்ததால் இருதரப்பு உறவினர்களையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். கடைசியில் திருமணத்தை ரத்து செய்து கொள்வதாக கூறி அவரவர்கள் பிரிந்து சென்றனர். மட்டன் நல்லி எலும்பிற்காக திருமணத்தை ரத்து செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.