பெங்களூரு : சீட்டுகட்டு போல் சரிந்த கட்டிடம் .. பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு.. சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு..
பெங்களூருவில் கட்டுமானப் பணியிலிருந்த அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
பெங்களூருவில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதில் ஹென்னூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருந்த அடுக்குமாடி கட்டிடம் ஒன்று கனமழைக்கு தாங்காமல் நேற்று (அக்.22) மாலை இடிந்து விழுந்தது. இதில் 7 தளங்களைக் கொண்ட அக்கட்டிடத்தில் பணிபுரிந்த 20 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். உடனடியாக தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்தும், அங்கு விரைந்து வந்த அதிகாரிகள் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர்.
இவர்களில் 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், அவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், 6 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முன்னதாக விபத்து நடந்த பகுதியை நேற்று நேரில் பார்வையிட்ட அம்மாநில துணை முதலமைச்சர் சி.கே.சிவக்குமார், கட்டுமானப் பணியை மேற்கொண்ட கட்டுமான நிறுவனம், ஒப்பந்ததாரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
முதல்கட்ட விசாரணையில் அஸ்திவாரம் பலவீனமாக இருந்ததே இந்த விபத்துக்கு காரணம் என்று விசாரணையில் தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த பகுதியில் 4 மாடிக் கட்டிடங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமாக அந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். அத்துடன் நில உரிமையாளர் மற்றும் கட்டிட ஒப்பந்ததாரரை கைது செய்துள்ள போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏழு அடுக்குகளைக் கொண்ட அந்த கட்டிடம் சரியும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


