"குறுக்கே வந்த காட்டுப்பன்றி.. சுக்குநூறான கார்" - பாஜக எம்எல்ஏ மகன் உட்பட 7 பேர் பரிதாப பலி!
மகாராஷ்டிரா மாநிலம் செல்சுரா பாலத்தில் நிகழ்ந்த கார் விபத்தில் பாஜக எம்எல்ஏ மகன் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநில பாஜக எம்எல்ஏ விஜய் ரஹாங்டேலி. இவரது மகன் அகிஷ்கர் ரஹாங்டேல். இவர் அங்குள்ள மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார். இச்சூழலில் நேற்று தேர்வு நடைபெற்றுள்ளது. இந்தத் தேர்வை எழுதுவதற்காக நண்பர்கள் ஆறு பேரை அழைத்துக் கொண்டு காரில் சென்றுள்ளார்.
தேர்வை எழுதி முடித்துவிட்டு விருந்துக்கு சென்றுள்ளார்கள். விருந்தில் கலந்துகொண்டு பின்னர் நேற்றிரவு 11 மணி அளவில் ஏழு பேரும் காரில் வீடு திரும்பியுள்ளனர். கார் செல்சுரா பகுதிக்கு அருகில் உள்ள பாலத்தில் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது திடீரென ஒரு காட்டுப்பன்றி குறுக்கே விழுந்துள்ளது. இதன் காரணமாக காரை ஓட்டிச் சென்ற அவிஷ்கர் ரஹாங்டேல் உடனடியாக பிரேக் போட முயற்சி செய்துள்ளார். ஆனால் பிரேக் பிடிக்கவில்லை. இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் ஓடியுள்ளது. ஒரு கட்டத்திற்கு மேல் பாலத்திலிருந்து கார் கீழே விழுந்து சுக்குநூறாக நொருங்கியது.
இதனால் பாஜக எம்எல்ஏவின் மகன் உள்பட ஏழு பேருமே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த பின்னர் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே வந்து அனைவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பாலம் இருந்த பகுதியில் காட்டுப்பன்றிகள் நடமாட்டம் இருந்ததா என்பது குறித்த அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர். இச்சூழலில் இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.