தொடர்ந்து 4வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம் - மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு

 
Lokh sabha Lokh sabha

ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 13ஆம் தேதி வரை நடைபெற்றது.  அதானி குடும்பம் மீதான மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து எதிர்க்கட்சிகள் விசாரணை நடத்தக்கோரி பிரச்சனை எழுப்பியதால், பெரும்பாலான நாட்கள் அவைகள்  முடங்கியது.  விடுமுறைக்குப் பின்னர் திங்கள் கிழமை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இரு அவைகளிலும் தொடங்கியது. அவை தொடங்கியதுடன் இந்திய நாடாளுமன்றத்தை பற்றி லண்டனில் ராகுல் காந்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென்று மக்களவையில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் பிரஹலாத் ஜோஷி ஆகியோரும்,  மாநிலங்களவையில் பியூஷ் கோயலும் பவலியுறுத்தினர்.   இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். அதேவேளை, அதானி விவகாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் கடந்த 3 நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

Parliament

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 4வது நாளாக இன்றும் முடங்கியுள்ளது. மக்களவையும், மாநிலங்களவையும் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. அடை நடவடிக்கை தொடங்கிய உடனேயே அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அதேவேளை, லண்டனில் ராகுல்காந்தியின் பேச்சு குறித்தும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஆளும் கட்சி கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியிம் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.