தொடர் அமளி - நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு

 
Parliament Parliament

ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 13ஆம் தேதி வரை நடைபெற்றது.  அதானி குடும்பம் மீதான மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து எதிர்க்கட்சிகள் விசாரணை நடத்தக்கோரி பிரச்சனை எழுப்பியதால், பெரும்பாலான நாட்கள் அவைகள்  முடங்கியது. இதனை தொடர்ந்து இரண்டாவது அமர்வு கடந்த 13ம் தேதி தொடங்கியது. இந்திய நாடாளுமன்றத்தை பற்றி லண்டனில் ராகுல் காந்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென்று வலியுறுத்தி ஆளுங்கட்சி எம்.பிக்களும்,  அதானி விவகாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் எம்.பிக்களும் அமளியில் ஈடுபட்டு வந்ததால் கடந்த 5 நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

Lokh sabha


  
இந்நிலையில், நேற்று காலை 11 மணிக்கு மீண்டும் அவரை கூடியதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அதானி முறைகேடு விவகாரம் தொடர்பாக பிரச்சினை எழுப்பினார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனக்கோரி அவர்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று கோஷங்கள் எழுப்பினார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆளுங்கட்சி எம்.பிக்கள் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குரல் எழுப்பினார்கள். இதனால் சபையில் ஒரே கூச்சலும், குழப்பமுமாக இருந்தது. இதனால் சபையை நடத்த முடியாத சூழ்நிலை நிலவியது. இதைத்தொடர்ந்து இன்று பிற்பகல் 2 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, இரு அவைகளும் மீண்டும் தொடங்கிய நிலையில், எம்.பிக்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை மற்றும் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 
 
இதனை தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வழக்கம் போல் இன்று காலை கூடின. அப்போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் அதே கோரிக்கைகளை வலியுறுத்தி கூச்சலும், குழப்பமும் ஏற்படுத்தினர். இதனால், மக்களவை மதியம் 2 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது. இதன் காரணமாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மதியம் 1 மணியளவில், தனது அறையில் வந்து சந்திக்கும்படி அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்து உள்ளார். இதேபோன்று மாநிலங்களவையும் தொடர் அமளி காரணமாக மதியம் 2 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது. அனைத்து கட்சி தலைவர்களும் தனது அறையில் வந்து சந்திக்கும்படி சபாநாயகர் ஜெகதீப் தன்கார் கேட்டு கொண்டார்.