ராகுல் காந்தி தகுதி நீக்கம் எதிரொலி - 11வது நாளாக இன்றும் முடங்கிய நாடாளுமன்றம்

 
Lokh sabha

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இன்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.

பிரதமர் மோடி தொடர்பான அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதனை தொடர்ந்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்தது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடங்கியவுடன் ராகுல்காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் ஏற்பட்ட அமளியால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. ராகுல் காந்தியின் தகுதிநீக்கத்தை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பிய நிலையில், மக்களவை மாலை 4 மணி வரையும், மாநிலங்களவை மதியம் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை தொடங்கிய நிலையில், அப்போதும் அமளி தொடர்ந்ததால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. 

இந்த நிலையில், ராகுல்காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் ஏற்பட்ட அமளியால் நாடாளுமன்றத்தின் நிகழ்வுகள் 11-வது நாளாக இன்றும் முடங்கியுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பிய நிலையில், மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் முழக்கத்தால், அவை தொடங்கிய அடுத்த நிமிடமே அவையை சபாநாயகர் ஒத்திவைத்தார். ராகுல்காந்தி பதவி பறிக்கப்பட்டத்தை கண்டித்து நாடாளுமன்றத்தில் திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்றும் கருப்பு உடை அணிந்து முழக்கங்களை எழுப்பினர்.