அதானி குழும முறைகேடு புகார் எதிரொலி - 2வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்

 
Parliament

அதானி குழும முறைகேடு குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் இரண்டாவது நாளாக அமளியில் ஈடுபட்டதை அடுத்து இரு அவைகளும் பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து நேற்று முன் தினம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதனை நேற்று மூன்றாவது நாள் கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில், எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் நிறுவனம், அதானி குழுமத்தை பற்றி சமீபத்தில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், பங்குச் சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயா்த்திக் காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி இருந்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்த குற்றச்சாட்டின் தாக்கத்தால் அதானியின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன. இதனால் அவரது சொத்து மதிப்பில், 7.44 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர். எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை இரு அவைகளின் தலைவர்களும் ஏற்க மறுத்ததை தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பகல் 2 மணிவரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. பின்னர், நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.  இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் கூட்டம் தொடங்கியது. அப்போது, அதானி குழும விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கத்தால் மக்களவை 2 மணி வரையிலும், மாநிலங்களவை 2.30 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது.