12வது நாளாக முடங்கிய நாடாளுமன்ற இரு அவைகள்..

 
Parliament

எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சியினரின் தொடர் அமளியால் நாடாளுமன்ற  இரு அவைகளும் முடங்கியுள்ளன.  

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த  மார்ச் 13ம் தேதி தொடங்கியது. இன்று நடாளுமன்றம் தொடங்கி 12 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இரண்டாவது அமர்வு தொடங்கியது முதல் எந்த ஆக்கப்பூர்வ நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் முடங்கியுள்ளது.  கடந்த வாரங்களில் அதானி விவகாரம் குறித்து காங்கிரஸ் கேள்வியெழுப்பி அமளியில் ஈடுபட்டு வந்தனர். அவர்களுக்கு  ஈடுகொடுக்கும் விதமாக ராகுல் காந்தி பிரான்ஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டி குறிப்பிட்டு,  அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி பாஜக எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.  

Parliament

அதன்பின்னர் ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், தொடர்ந்து காங்கிரஸ்  உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.    எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பிய நிலையில், மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் முடங்கியுள்ளன.   நாடாளுமன்றத்தின் நிகழ்வுகள் 12-வது நாளாக இன்றும் முடங்கியுள்ளது. நாடாளுமன்றம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே  எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பிய நிலையில், மக்களவை 12 மணி வரையும், மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.  . ராகுல்காந்தி தகுதி நீக்கத்தைக்  கண்டித்து நாடாளுமன்றத்தில் திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்றும் கருப்பு உடை அணிந்து அமளியில் ஈடுபட்டனர்.