"மக்களே ஏமாந்திடாதீங்க.. நாங்க பொறுப்பல்ல" - எச்சரிக்கும் பிஎஸ்என்எல்!
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள போலி இணையதளத்தை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பெயரில், மர்ம நபர்கள் சிலர் www.bsnlbharatfiberdealer.in என்ற பெயரில் போலியான இணையதளத்தை உருவாக்கியுள்ளனர். அதன்மூலம், பொதுமக்களை தொடர்புகொண்டு வீடுகளுக்கு கேபிள் மூலம் இணையதள சேவை வழங்குவதாகக் கூறுகிறார்கள்.
ஆன்லைன் மூலம் பணம் வசூலிப்பதாகவும் மோசடியில் ஈடுபடுவதாகவும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதுபோன்ற போலி தகவல்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தப்படுவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும், இந்த இணையதளத்தை நம்பி பணம் செலுத்தி ஏமாந்தால், அதற்கு பிஎஸ்என்எல் நிறுவனமோ அல்லது அதன் குழும நிறுவனங்களோ பொறுப்பு ஏற்காது.
பொதுமக்கள் இதுபோன்ற போலி நபர்கள் குறித்து bsnlprchn@gmail.com என்ற இ-மெயில் மூலம் புகார் அளிக்கலாம். இதன்மூலம், சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், பிஎஸ்என்எல் சேவைகள் குறித்த விவரங்களை அறிய www.chennai.bsnl.co.in, www.bsnl.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும் என பிஎஸ்என்எல் சென்னைத் தொலைபேசி நிறுவனம் தெரிவித்துள்ளது.