வோட்டர் ஐடியுடன் ஆதார் இணைப்பு... தேர்தல் சட்டத்தில் 4 முக்கிய சீர்திருத்தங்கள் என்னென்ன?
இந்தியா ஜனநாயக நாடு. இங்கு ஜனங்களின் வாக்குகளுக்கு அளவு கடந்த மதிப்பும் மரியாதையும் உள்ளது. அவர்கள் வாக்களிக்கும் முறை, அவர்களின் உரிமைப் பாதுகாப்பது போன்றவை ஜனநாயக நாட்டின் மிக முக்கிய கடமைகள். அந்த வகையில் காலங்கள் மாற மாற சீர்திருத்தங்களும் அவசியமாகின்றன. முன்பிருந்த சூழல் இப்போது இல்லை. தொழில்நுட்ப வளர்ச்சி காலக்கட்டத்தில் இருக்கிறோம். ஆகவே தேர்தல் சட்டங்களில் சில சீர்திருத்தங்கள் செய்வதற்கான பரிந்துரையை மத்திய அரசு தேர்தல் ஆணையத்திடம் கேட்டிருந்தது.
அதன்படி நான்கு முக்கிய மாற்றங்களை தேர்தல் ஆணையம் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. அதில் முதலாவது ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பது. ஆதாருடன் இணைப்பது கட்டாயம் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இதனால் மக்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள். அதேசமயம் அவர்கள் விருப்பப்பட்டால் இணைத்துக் கொள்ள முடியும். இந்த மாற்றம் மூலம் வாக்காளர் அடையாள அட்டை இல்லாமலும் மக்கள் வாக்களிக்க முடியும்.
இரண்டாவதாக தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்குவது. தேர்தல் சமயங்களில் நாட்டின் எந்தவொரு இடத்திலும் அதிகாரம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உரிமை உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. உதாரணமாக வாக்குச்சாவடிகளுக்காக ஒரு பள்ளியையோ, கல்லூரியையோ யார் அனுமதியும் பெறாமல் பயன்படுத்த முடியும். யாரும் மறுப்பு தெரிவிக்கக் கூடாது. இதுவே அந்த இரண்டாவது சீர்திருத்தம்.
மூன்றவாதாக ஆண்டுக்கு 4 முறை புதிய வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை. தற்போது வரை ஆண்டுக்கு 1 முறை, அதாவது ஜனவரி 1ஆம் தேதி அல்லது அதற்கு முன்னர் 18 வயது நிரம்பியிருந்தால்தான் புதிய அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும். ஜனவரி 2ஆம் தேதிக்கு பின்னால் 18 வயது நிரம்பியிருந்தால் அவர்கள் அடுத்து ஜனவரி 1ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும். தற்போது இதனை மாற்றி ஒரு ஆண்டில் ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 ஆகிய நான்கு தேதிகளுக்கு முன் 18 வயது பூர்த்தியாகிவிட்டால் அவர்கள் புதிய அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும்.
நான்காவதாக ராணுவ வீரர்கள் போன்ற உயர் சர்வீஸ் அதிகாரிகள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டால், ஆண் அதிகாரிகளின் மனைவிகள் அவர்களின் வாக்குகளை அளிக்க வசதி ஏற்படுத்தப்படிருந்தது. ஆனால் பெண் சர்வீஸ் அதிகாரிகளின் கணவர்கள் இவ்வாறு மனைவிகளின் வாக்குகளை அளிக்க முடியாது என்ற விதி இருந்தது. தற்போது திருத்தம் செய்யப்படவுள்ள புதிய விதியின்படி சர்வீஸ் அதிகாரிகள் ஆணோ, பெண்ணோ, அவர்களின் வாக்குகளை அவர்களின் துணைவர்கள் அளிக்க முடியும். இந்த சீர்திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் மசோதாவாக நிறைவேற்றப்படும்.