"பலாத்காரத்தால் கர்ப்பமான பெண்ணை டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க கட்டாயப்படுத்த கூடாது" - ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு!
உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில் 2017ஆம் ஆண்டு 14 வயதான சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நடந்து 7 மாதங்களுக்குப் பின் தான் தெரியவந்துள்ளது. சிறுமி கர்ப்பமானதையடுத்து தாயார் கோட்வாலி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் சிலர் போக்சோவின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவன் சிறுவன்.
அந்தச் சிறுவனின் தாயார், கருவுற்ற பெண்ணுக்கு மரபணு பரிசோதனை நடத்தி அதன்மூலம் தன் மகனை குற்றத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என கோரியிருந்தார். இதற்காக 2021ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி சிறார் நீதி வாரியத்தில் முறையிட்டுள்ளார். ஆனால் வாரியம் அவர் மனுவை நிராகரித்துவிட்டது. இதையடுத்து அவர் போக்சோ நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். "மரபணு பரிசோதனை நடத்தப்படவில்லை என்றால் அந்தக் குழந்தை முறை தவறிப் பிறந்த குழந்தையாகி விடும். அந்தப் பெண்ணும் முறைதவறியவள் என்றாகிவிடுவாள்” சிறுவன் தாயார் தரப்பு வாதாடியுள்ளது.
இதையடுத்து போக்சோ நீதிமன்றம் மரபணு பரிசோதனைக்கு அனுமதி வழங்கியது. ஆனால் இதனை எதிர்த்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், தீர்ப்பை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் மேல் முறையீடு செய்தார். அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி சங்கீதா சந்திரா, "இங்கே கேள்வி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட சிறுமியின் கருவில் வளரும் குழந்தைக்கு யார் தந்தை என்பது அல்ல. அது அவசியமற்றது. அச்சிறுமி பாதிக்கப்பட்டாரா என்பதே முக்கியம்” எனக்கூறி மரபணு பரிசோதனைக்கு தடை விதித்தார்.