பிரிஜ் பூஷன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் - டெல்லி காவல்துறை

 
Brij Bhushan

பிரிஜ் பூஷன் மீது சிறுமி அளித்த புகாருக்கு போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பதால் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக எம்.பியுமான பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். இதன் எதிரொலியாக சிறுமி ஒருவர் அளித்த புகாரின் பேரில் பிரிஜ் பூஷன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாகூர் அழைப்பு விடுத்தார். மத்திய அமைச்சருடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு மல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், சிறுமி அளித்த பாலியல் புகாருக்கு எந்தவித அடிப்படை ஆதாரமும் கிடைக்கவில்லை என பிரிஜ் பூஷன் சிங் மீதான குற்றப்பத்திரிக்கையை கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், சிறுமி அளித்த புகாரில் பிரிஷ் பூஷன் மீது போக்சோவில் வழக்கு பதிவான நிலையில் அதனை ரத்து செய்ய வேண்டும். பிரிஷ் பூஷன் மீது சிறுமி அளித்த புகாருக்கு போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை. சிறுமி அளித்த புகாரில் மீது அவரது தந்தை தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டே இருந்தார். சிறுமி முன்வைத்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக வழக்கை ரத்து செய்ய வேண்டும் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.