அக்னிபத் திட்டத்திற்கு தடை கோரிய வழக்கு - அடுத்த வாரம் விசாரணை

 
supreme court

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

மத்திய பாஜக அரசு ராணுவத்தில் அக்னிபத் என்ற திட்டத்தை புதிதாக கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பீகார், உத்தரபிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டன. மேலும் இரண்டு இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இதேபோல் எதிர்க்கட்சிகள் சார்பிலும் நாடு முழுவதும் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன.  இதனிடையே பஞ்சாப் சட்டப்பேரவையில் அக்னிபத் திட்டத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பல்வேறு போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் மத்திய அரசு அக்னிபத் திட்டத்தை செயல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. 

இதேபோல் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டன. இந்நிலையில், அக்னிபத் திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்டிருக்கும் அனைத்து வழக்குகளும் அடுத்த வாரத்தில் உரிய அமர்வு முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என உச்சநீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்னிபத் திட்டம் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படுமா ? அல்லது தடை விதிக்கப்படுமா? என்பது அடுத்த வாரம் நடைபெறும் விசாரணையில் தெரியவரும்.