மகளிர் தின நாளில் கல்லூரி மாணவிக்கு கிடைத்த கௌரவம்!
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசு மகளிர் கல்லூரி மாணவி நிவேதா ஒரு நாள் காவல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாநில வாரியாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் புதுச்சேரி காவல்துறை சார்பில் பாரதிதாசன் அரசு கல்லூரி மாணவி நிவேதா இன்று முத்தியால்பேட்டை காவல் நிலைய அதிகாரியாக ஒருநாள் நியமிக்கப்பட்டுள்ளார்.
என்சிசி மாணவியான நிவேதா, என்சிசி உடையில் முத்தியால்பேட்டை காவல் நிலையத்திற்கு வந்த நிலையில் அவருக்கு காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் பூங்கொத்து அளித்து வரவேற்றார். பின்னர் ரோல்களில் பங்கேற்று இன்றைய பணிகளை அறிந்து கொண்ட அவர் , பின்பு காவல் நிலையத்தில் உள்ள அறைகளை பார்வையிட்டார் . அத்துடன் ஆவணங்களையும் அவர் ஆய்வு செய்தார். முத்தியால் பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட முக்கிய சந்திப்புகளில் உள்ள போக்குவரத்து நெரிசலை சரி செய்தும், பொதுமக்கள் அளித்த புகார்களையும் விசாரித்தார்.
ஒரு நாள் காவல் அதிகாரியாக தன்னை நியமித்த புதுச்சேரி காவல் துறையினருக்கு நிவேதா தனது நன்றியை தெரிவித்துக் கொண்டதோடு , இந்த தருணம் பெருமையாக நினைப்பதாகவும், போலீசில் பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது என்றும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.