சாம்பலுக்கு அடியில் இன்னும் எரியும் தீக்குழம்புகள் இருக்கின்றன - கார்கே ஆவேசம்

 
Mallikarjuna Kharge

நாங்கள் என்றென்றும் தோற்றவர்கள் என்று நினைக்காதீர்கள், சாம்பலுக்கு அடியில் இன்னும் எரியும் தீக்குழம்புகள் இருக்கின்றன என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் கூறியதாவது: நாட்டில் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டால், ஆட்சியாளர்கள்  மோசமானவர்கள் என்று பொருள். இதயத்தில் கை வைத்து சொல்லுங்கள். நாடு சுதந்திரமாக இருக்கிறதா?  அமைதியாக இருப்பதால், நாங்கள் என்றென்றும் தோற்றவர்கள் என்று நினைக்காதீர்கள்.  சாம்பலுக்கு அடியில் இன்னும் எரியும் தீக்குழம்புகள் இருக்கின்றன. பெண்கள் தலைமையிலான வளர்ச்சி' பற்றி பிரதமர் பேசுகிறார். ஆனால் இவர்களின் ஆட்சியில் பெண் மல்யுத்த வீரர்கள் கூட பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என்பதுதான் உண்மை.  மகளைக் காப்போம் மகளை  படிக்க வைப்போம் பிரச்சாரம் பற்றி அதிகம் பேசப்படுகிறது, ஆனால் அதன் 79% பணம் விளம்பரங்களுக்காக தான் செலவிடப்படுகிறது.  2013-ல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 3.1 லட்சம் பதிவு செய்யப்பட்டன,  இது 2021-ல் 4.3 லட்சமாக அதிகரித்துள்ளது. இதுபோன்ற வழக்குகள் 21 பாஜக எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீது நடந்து வருகின்றன.  2014ல், 'பெண்கள் மீதான தாக்குதல் போதும் - அப்கி பார் மோடி சர்க்கார்' என்ற முழக்கத்தை பாஜக வழங்கியது.ஆனால் கத்துவா, உன்னாவ், ஹத்ராஸ், மணிப்பூர் தொடங்கி மற்ற பகுதிகளுக்கு என்ன நடந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். 


நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி பெண் எம்.பி.யை சூர்ப்பனகை என்று அழைத்தது, 50 கோடி மதிப்புள்ள காதலி இருப்பதாகக் கீழ்த்தரமாகப் பேசியது, மோடியே இப்படிப் பேசினால் தன்னைச் சுற்றியுள்ளவர்களை என்ன செய்யச் சொல்வார்.  அதனால்தான் பாஜக அமைச்சர்கள், பல முதல்வர்கள் பாதிக்கப்பட்டவர்களுடன் நிற்காமல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறார்கள்.  எதிர்க்கட்சியில் இருந்தபோது, காஸ் சிலிண்டருடன் ரோட்டில் அமர்ந்து இருந்த அவர்களின் தலைவர்களில் ஒருவர்,  தற்போது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சராக உள்ளார். ஆனால் இதுபோன்ற சம்பவங்களில் அவரைக் காணவில்லை போலும். 

RSS தலைவர் மோகன் பகவத்ஜி, பெண்கள் இல்லத்தரசியாக மட்டுமே இருக்க வேண்டும் என்று பேசி வருகிறார்.  ஆனால் எங்கள் கருத்து அவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டது. 1925 ஆம் ஆண்டு காந்திஜிக்குப் பிறகு சரோஜினி நாயுடுஜி காங்கிரஸ் தலைவரானார், அந்த ஆண்டு தான் ஆர்எஸ்எஸ் பிறந்தது, அதன் தலைமை இன்றுவரை எந்தப் பெண்ணின் கைக்கும் வரவில்லை. பாரதிய ஜனதா எப்போதும் தேர்தல் நோக்கில் மட்டுமே செயல்படுகிறது. ஆர்எஸ்எஸ்ஸிடம் ரிமோட் உள்ளது.  வதந்திகளை பரப்புவதற்கு பாஜகவிடம் ஐடி அமைப்பும் உள்ளது.  நாம் அவர்களைப் போல் இருக்க வேண்டியதில்லை. ஆனால் மாவட்ட, தொகுதி அளவில் முறையான திட்டம் வகுத்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது.  மகிளா காங்கிரஸின் ஒவ்வொரு தொண்டர்களும் உறுதியாக மக்களின் குரலாக மாறுவார்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இவ்வாறு கூறினார்.