மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 கொடுப்போம்.. காங்கிரஸ் வாக்குறுதி

 
கமல் நாத்

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 கொடுப்போம், ரூ.500க்கு சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் கமல் நாத் வாக்குறுதி அளித்தார்.


மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் 230 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெற உள்ளது. எதிர்வரும் மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு, ஆளும் கட்சியான பா.ஜ.க.வும், எதிர்க்கட்சியான காங்கிரஸூம் பெண் வாக்காளர்களை கவர போட்டி போட்டு வருகின்றனர். 

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.வின் வெற்றி பெரிதாக இருக்கும்… முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் நம்பிக்கை

கடந்த சில வாரங்களுக்கு முன்,  மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கும் குறைவான குடும்ப வருமானம் உள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவி தொகை வழங்கும் லாட்லி பெஹ்னா யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதற்காக அண்மையில் தாக்கல் செய்த அம்மாநில பட்ஜெட்டில் ரூ.8 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்தார். இந்நிலையில்,  எதிர்வரும் மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மத்திய பிரதேசத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவி தொகையும், ரூ.500க்கு சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.

சமையல் கியாஸ்

மத்திய பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதி அறிவிப்பை வெளியிட்ட அம்மாநில காங்கிரஸின் தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான கமல் நாத் கூறுகையில், முதல்வர்  சிவ்ராஜ் சவுகான் பதவியில் நீடிக்க தேர்தலுக்கு முன்பு வெற்று வாக்குறுதிகளை அளிக்கிறார். சவுகான் ஜி வெற்று வாக்குறுதிகளை அளிக்கும் கலையை கச்சிதமாக செய்துள்ளார். அவர் அதிரடியாக அறிவிக்கிறார். ஆனால் தேர்தல் வரை இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாது. மத்திய பிரதேதச்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு மாதம் ரூ.1,000க்கு பதிலாக ரூ.1,500 கொடுப்போம், தவிர சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை ரூ.500ஆக குறைக்க போகிறோம் என்று தெரிவித்தார்.