கர்நாடகாவில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை - தொண்டர்கள் கொண்டாட்டம்!

 
congress

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களுக்கு மேல் முன்னிலை வகித்து வரும் நிலையில், அக்கட்சி தொண்டர்கள் நாடு முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவடயவுள்ளதை முன்னிட்டு அங்கு கடந்த 10ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. 36 மையங்களில் வாக்கு என்னும் பணி தற்போது நடைபெற்று வரும் நிலையில் 36 அறைகளில் 4256 மேசைகள் அமைக்கப்பட்டு வாக்கு என்னும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் கர்நாடகாவில் ஆட்சி பொறுப்பில் உள்ள பாஜக தற்போது பின்னடைவை சந்தித்துள்ளது. கர்நாடக தேர்தல் தற்போதைய நிலவரத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி 224 தொகுதிகளில் 115-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.  ஆளும் கட்சியான பாஜக 80க்கும் மேற்பட்ட இடங்களிலும் மதசார்பற்ற , ஜனதா தளம் 20க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதன் மூலம் கர்நாடகத்தில் தனி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிப்பதை அக்கட்சியின் தொண்டர்கள் தற்போதே கொண்டாடி வருகின்றனர்.  குறிப்பாக டெல்லி மற்றும் பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் தலைமையகங்களில் காங்கிரஸ் தொண்டர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனிடையே காங்கிரஸ் முன்னிலை வகிப்பதை அடுத்து பிரியங்கா காந்தி சிம்லாவில் உள்ள அனுமன் கோவியில் வழிபாடு செய்தார்.