இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 7,830- ஆக உயர்வு..
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 7,830- ஆக உயர்ந்துள்ளது. நேற்று கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்து 676 ஆக குறைந்து இருந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு முதல் உலக நாடுகளையே உருகுலைந்து போகச் செய்தது கொரோனா வைரஸ். லாக்டவுன், எப்போதும் முகக்கவசம், மருத்துவமனை, பரிசோதனை, சமூக இடைவெளி என 2 ஆண்டுகள் ஆட்டிவைத்த கொரோனா பாதிப்பு பின்னர் மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது. இதனையடுத்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்நிலையில் தற்போது தொற்று பாதிப்புகள் மீண்டும் அதிகரித்து வருகிறது.
இதனால் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது சில மாநிலங்களில் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மருத்துவமனைக்கு வருபவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் நேற்று கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்து 676 ஆக குறைந்து இருந்த நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை 7,830- ஆக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 40,215- ஆக உள்ளது. நேற்றைய தினம் கொரோனா பாதிப்பு 5,676 ஆக பதிவாகியிருந்தது. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4, 47,76,002 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 16 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். டெல்லி, பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 2 மரணங்களும் குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா ஒன்றும் கேரளாவில் 5 மரணங்களும் என 16 இறப்புகள் பதிவாகியுள்ளன. உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,31,016.-ஐ தொட்டுள்ளது.