புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு!
புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வந்தது. கடந்த முறை அக்டோபர் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்த நிலையில் கடைகள் ,வணிக நிறுவன ஊழியர்கள் 100% தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்ய வேண்டும். கடற்கரை சாலை ,பூங்காக்கள் ,தாவரவியல் பூங்காக்கள் அனைத்தும், அனைத்து நாட்களும் வழக்கமான நேரங்களில் முழுமையாக திறந்திருக்கலாம். அனைத்து வழிபாட்டு தலங்களும் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் உள்ளிட்ட பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.
அத்துடன் வணிக நிறுவனங்கள், காய்கறி ,பழக் கடைகள், உணவகங்கள் ,தங்கும் விடுதிகள், தேனீர் கடைகள் ஆகியவை குளிர்சாதன வசதி இன்று இரவு 11 மணி வரை இயங்கும், மதுக்கடைகள், சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கும் அனுமதி அளித்திருந்தது.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 15ம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தமுறை திரையரங்குகள் 100% பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி,கோயில் திருவிழாக்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.