ராணுவத்தால் நாகா மக்கள் சுட்டுக்கொலை... இணைய சேவை கட் - 144 தடை உத்தரவு அமல்!
நாகலாந்து மாநிலத்தில் "நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (கப்லாங் பிரிவு)” மற்றும் "உல்ஃபா" ஆகிய போராளிக்குழுக்கள் உள்ளன. இவர்கள் நாகலாந்தை இந்தியாவிலிருந்து பிரிக்க வேண்டும் எனவும், வடகிழக்கு மாநிலங்களில் நாகா இன மக்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அதனை உள்ளடக்கிய "நாகாலிம்" எனும் தனி நாடாக அறிவிக்கக் கோரி போராடி வருகிறார்கள். ஆனால் இந்திய அரசோ அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் அரசுக்கும் போராளிக்குழுக்களுக்கும் நீண்ட நாட்களாகவே மோதல் நிலவுகிறது.
அந்த வகையில் மோன் மாவட்டத்தில் இந்த இரு போராளிக்குழுக்களும் பலமானவை. அங்கே இவர்களின் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறை மூலம் துணை ராணுவப் படையினரான அசாம் ரைபிள்ஸ் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் திரு, ஒடிங் ஆகிய கிராமங்களில் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். அந்தச் சமயம் தான் சுரங்க தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்குச் செல்ல வேனிற்காக காத்திருந்தபோது, அவர்களை போராளிகள் எனக் கருதி துணை ராணுவ வீரர்கள் அவர்களைச் சுட்டுக்கொன்றுள்ளனர்.
இச்சம்பவத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆத்திரமடைந்த கிராம மக்கள் ராணுவத்தினர் மீது தாக்குதல் நிகழ்த்த, ஒரு வீரர் உயிரிழந்தார். ராணுவ வீரர்களின் கார்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இதனால் மோன் மாவட்டம் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது. அம்மாநில முதல்வர் நெய்பியூ ரியோ சிறப்பு விசாரணைக் குழு அமைத்துள்ளார். தற்போது பதற்றத்தைத் தணிக்க மோன் மாவட்டத்தி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணைய சேவை, தொலைத்தொடர்பு சேவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் இன்று சந்திக்கவிருக்கிறார்.