திருப்பதியில் ஆர்ஜித சேவைகளை காண ஏப்.1 முதல் பக்தர்களுக்கு அனுமதி - தேவஸ்தானம் முடிவு

 
திருப்பதி கோவில்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஆர்ஜித சேவைகளில் பக்தர்களை அனுமதிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வஸ்தர அலங்கார சேவை, திருமண உற்சவ சேவை, சுப்ரபாத தரிசன சேவை, தோமாலை அர்ச்சணை சேவை, உதய அஸ்தமன சேவை மற்றும் ஆர்ஜித சேவை என பல்வேறு கட்டண சிறப்பு அலங்கார சேவைகள் உள்ளன. ஆனால்  கடந்த 2 ஆண்டுகளாக  கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் இன்றி கட்டண சேவைகளான  ஆர்ஜித சேவைகள் நடைபெற்று வந்தன.  பின்னர்  கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து  ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் மற்றும் இலவச தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து தேவஸ்தானம் வழங்கி வந்தது.

திருப்பதி

இந்த நிலையில் தற்போது  கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி நடைபெற்று வந்த ஆர்ஜித சேவைகளில் பக்தர்களை அனுமதிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளது.  அதன்படி ஏப்ரல் 1-ந்தேதி முதல் சுப்ரபாதம், அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை, மேல் சாட் வஸ்திரம்,  திருப்பாவாடை, சிறப்பு அபிஷேகம், கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை போன்றவை  மீண்டும் தொடங்கப்பட உள்ளன.

திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்து தருவதாக மோசடி – 19 போலி இணையதளங்கள் கண்டுபிடிப்பு

இந்த கல்யாண உற்சவம் ஊஞ்சல் சேவை,  ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும்  சகஸ்கர தீப அலங்காரம்  உள்ளிட்ட சேவைகளை நேரடியாகவும், இணையதளம் மூலமாகவும் பக்தர்கள்  கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவதிலும் பழைய முறையே பின்பற்றப்படும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆர்ஜித சேவைகள், உதயாஸ்தமன சேவை, விம்சதி வர்‌ஷ தர்ஷினி சேவை டிக்கெட்டுகள் முன்பதிவு செய்தவர்கள் ஏப்ரல் 1-ந்தேதி முதல் கொரோனா நிபந்தனைகளுடன் தரிசனம் மேற்கொள்ள  அனுமதிக்கப்படுவார்கள் என்று திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.