"இந்தியாவை மீண்டும் படுகுழிக்குள் தள்ளிவிட்டீர்கள் மக்களே" - புலம்பும் மத்திய அரசு!
ஒமைக்ரான் எனும் வார்த்தை உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அதன் பாதிப்பு லேசானது தான் என சொல்லப்பட்டாலும் கூட அது பரவும் வேகம் மிக மிக அதிகமாக இருக்கிறது. உலக சுகாதார அமைப்பு ஒமைக்ரானை கவலையளிக்கக் கூடிய வைரஸாக (Variant Of Concern) வகைப்படுத்தியுள்ளது. தற்போது 60க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவியுள்ளது. பல நாடுகள் மீண்டும் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளன. குறிப்பாக விமான நிலையங்களில் ஆர்டிபிசிஆர் சோதனை, நெகட்டிவ் சான்றிதழ், கட்டாய தனிமை என பழைய நிலைக்கு திரும்பியுள்ளன.
ஒருசில நாடுகள் ஒமைக்ரான் பரவல் அதிகம் உள்ள ஆப்பிரிக்க நாடுகள், பிரிட்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுடனான விமானப் போக்குவரத்தை துண்டித்துள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை அவ்வாறு தடை எதையும் பிறப்பிக்கவில்லை. இருப்பினும் விமான நிலையங்களில் கட்டுப்பாடுகளை இறுக்கியுள்ளது. ஆனாலும் இந்தியாவில் 33 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 14 பேர் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என்பதே கவனத்தில் கொள்ள வேண்டியது. 9 பேருக்கு அறிகுறி இருக்கிறது. 14 பேருக்கு அறிகுறி இல்லை.
இவர்களில் 9 பேர் வெளிநாடு பயணம் மேற்கொண்டிருக்கவில்லை என்பது தான் சிக்கலாக எழுந்துள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் சமூகப் பரவலாக மாறிவிடுமோ என்ற அச்சம் மேலோங்கியுள்ளது. இந்தியாவில் மாஸ்க் பயன்பாடு குறைந்திருப்பதால் நாடே ஆபத்தில் இருப்பதாக கொரோனா தடுப்பு பணிக்குழு தலைவர் விகே பால் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள அவர், "உலகில் எந்த வைரஸ் உருமாறினாலும் அதை தடுக்க உலகளாவிய தடுப்பூசி என்றால் அது மாஸ்க் மட்டுமே. இந்தியாவில் 2ஆம் அலைக்கு முன்பு மாஸ்க் பயன்பாடு குறைவாக இருந்தது.
அதற்குப் பின் அனைவரும் மாஸ்க் அணிந்தோம். ஆனால் ஆகஸ்ட் மாதத்தில் பரவல் குறைந்ததும் மாஸ்கையும் கழற்றி எறிந்தோம். மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிட்டோம். இதனால் நாம் ஆபத்தான நிலைக்குச் சென்றுவிட்டோம். இனிமேலாவது நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையெனில் பேரழிவு ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது. நாடு முழுவதும் 70 பகுதிகளில் கொரோனா பரவல் இன்னும் குறையவில்லை என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். இதை பீதியடைய சொல்லவில்லை. நீங்கள் விழிப்புணர்வுடன் மாஸ்க் அணிய வேண்டும் என்பதற்கே சொல்கிறேன்.
உலக நாடுகளில் நடப்பதை வைத்து நாம் பாடம் கற்க வேண்டும். ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவில் சில பகுதிகளில் கொரோனா பரவல் அதிகமாகியுள்ளது. பெரும்பாலான மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னும் ஒமைக்ரான் தொற்று தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பிரிட்டனில் 10 லட்சம் பேரில் 700 மக்கள் என்ற அளவில் கொரோனா தாக்குகிறது. 2ஆம் அலையில் நாம் அனுபவித்த கொடுமையை விட இது 2 மடங்கு அதிகம். டெல்டா, ஒமைக்ரான் என பல வகையில் கொரோனா அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் தினசரி 5 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே அனைவரும் மாஸ்க் அணிந்து விழிப்புடன் இருக்க வேண்டும்” என்றார்.