வாங்கி குவித்த மக்கள்... 4 நாட்களில் ரூ.20 ஆயிரம் கோடி - லம்ப்பாக அடித்த அமேசான், பிளிப்கார்ட்!
இந்தியாவின் பிரபல இ-காமர்ஸ் நிறுவனங்கள் ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான். இந்த இரு நிறுவனங்களுக்கு தான் ஆன்லைன் சந்தையில் கடும் போட்டி. இதனால் விழாக்காலங்களுக்கு முன்பே இந்த இரு நிறுவனங்களின் தளங்களும் விழாக்கோலம் பூண்டுவிடும். அந்த அளவிற்கு வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக அதிரடியான சலுகைகள், தள்ளுபடிகளை வாரி வழங்குவார்கள். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா ஊரடங்கு காலம் இருந்ததால் பெரியளவில் லாபம் ஈட்ட முடியாமல் இதுபோன்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள் தவித்து வந்தன.
இதனால் மக்களை மீண்டும் ஆன்லைன் பொருட்களை நுகரச் செய்யும் வகையில் இரு நிறுவனங்களும் பெரிய பெரிய சலுகைகளை அளித்து வந்தன. இச்சூழலில் தசரா பண்டிகைகள், தீபாவளி வருவதால் இம்மாத தொடக்கத்திலேயே விழாக்கால சலுகைகளை மீண்டும் கொண்டுவந்தன. அமேசான் Great Indian Festival என்ற பெயரிலும் ஃபிளிப்கார்ட் The Big Billion Days என்ற பெயரிலும் ஆரம்பித்தன. அதேபோல மற்ற இ-காமர்ஸ் நிறுவனங்களும் போட்டிக்கு சலுகைகளை அறிவித்தன. அக்டோபர் 2 முதல் அக்டோபர் 5 வரையிலான நான்கு நாட்களில் அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட இ-காமர்ஸ் நிறுவனங்கள் இணைந்து சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் விற்பனை செய்துள்ளதாக ரெட்சீர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விற்பனைகள் இன்றோடு முடிவடைகின்றன. அக்டோபர் 5 முதல் இன்று வரையிலான நாட்களில் எப்படியும் மேலும் 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியிருக்கலாம் எனவும் கூறியுள்ளது. இந்த விழாக்கால விற்பனையில் மொத்தமாக 36 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் விற்பனை நிகழும் என்றும் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட் போன்கள், ஆடைகள், டிவி, வீட்டு உபயோக சாதனங்களை ஆன்லைனில் வாங்குவது மிகப் பெரும் அளவில் அதிகரித்திருப்பதாகவும், இதனால் கடந்தாண்டை விட இந்தாண்டு ஆன்லைன் வழியிலான விற்பனை 37% அதிகரிக்கும் என்றும் சொல்லியுள்ளது.