கர்நாடக தேர்தல் - நட்சத்திர பேச்சாளர்கள் சுயகட்டுப்பாடுடன் பேச தேர்தல் ஆணையம் உத்தரவு

 
election commision

அரசியல் கட்சிகளும், நட்சத்திர பேச்சாளர்களும் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் கவனமாக செயல்பட வேண்டும் எனவும், வார்த்தைகளில் சுயகட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. 

கர்நாடக சட்டப்பேரவைக்கு வருகிற 10ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. நாளுக்கு நாள் அனல் பறக்கும் பரப்புரையால், தலைவர்கள் வருகை மற்றும்  நட்சத்திர பேச்சாளர்கள் என கர்நாடக தேர்தல் பரப்புரை  உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அத்துடன் அரசியல் கட்சிகள் பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அதவகையில் பாஜக நேற்று முன் தினம் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் ஏழை குடும்பங்களுக்கு இலவச சமையல் கியாஸ் சிலிண்டர்கள், இலவச பால், ரேஷன் கடைகளில் 5 கிலோ சிறுதானியங்கள் வழங்கப்படும் என அசத்தலான அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன. இதேபோல் நேற்று கர்நாடக காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.  

இந்நிலையில் கர்நாடக தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.  தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் தரம் தாழ்ந்த முறையில் விமர்சனங்கள் வைக்கப்படுவதை தீவிர கவனத்தில் கொண்டுள்ளோம். முறையற்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து பெற்றவர்கள் அப்படி பேசுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பான புகார்களும், எதிர் புகார்களும் ஊடகங்களில் எதிர்மறையான கவனத்தை பெற்றுள்ளன. ஆகவே, அரசியல் கட்சிகளும், நட்சத்திர பேச்சாளர்களும் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் கவனமாக செயல்பட வேண்டும். வார்த்தைகளில் சுயகட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். சுமூகமான தேர்தல் சூழ்நிலையை சீர்குலைத்துவிடக்கூடாது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.