மின்சார சட்டத்திருத்த மசோதா - நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்..
நாடாளுமன்றத்தில் மின்சார சட்டத் திருத்த மசோதா, இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 18ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் பல நாட்கள் நாடாளுமன்றம் முடங்கியிருந்த நிலையில் சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் கூடுகிறது. இந்தநிலையில் இன்று நாடாளுமன்றத்தில் மின்சார சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மசோதாவை மின்துறை அமைச்சர் ஆர்.கே. சிங் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த சட்டத்திருத்த மசோதாவில், மின் விநியோகத்தை தனியாருக்கு விடுவது, மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குதல், குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்சம் மின்கட்டணத்தை நிர்ணயிப்பது தொடர்பாகவும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. அத்துடன் உற்பத்தி செலவுக்கு இணையாக கட்டணம் இருந்தால், விநியோக நிறுவனங்களை சிறப்பாக நடத்த முடியும் என மத்திய அரசு மசோதாவில் குறிப்பிட்டுள்ளது. மானியத்தை கணக்கில் கொள்ளாமல் மின் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது இந்த சட்டத் திருத்த மசோதாவின் முக்கிய அம்சமாக உள்ளது. இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம் பல்வேறு அதிகாரங்கள் தேசிய மின் தொகுப்பு விநியோக மையத்துக்கே வழங்கப்படும் என கூறப்படுகிறது.