Byju's நிறுவனருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..

 
Byju's CEO Raveendran

அந்நிய செலாவணி மோசடி தொடர்பான வழக்கில், பெங்களூருவில் Byjus நிறுவனர் ரவீந்திரன் தொடர்புடைய 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.  நடத்தப்பட்ட இந்த  சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது.  

பெங்களூருவை சேர்ந்த   BYJU’s இன் தலைமை நிர்வாக அதிகாரி பைஜு ரவீந்திரனின் வீட்டில் அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தியது. அன்னிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) விதிகளின் கீழ்,  ரவீந்திரனின் வீடு மற்றும் நிறுவனங்களில் சோதனை நடத்தியது. இந்த  சோதனையின் போது பல குற்றவியல் ஆவணங்கள் மற்றும் தரவுகள் கைப்பற்றப்பட்டதாக  அமலாக்கத்துறை  தெரிவித்துள்ளது.  

BYJU's

2011-23 வரையிலான காலகட்டத்தில் பைஜூஸ் நிறுவனம் ரூ.28,000கோடி அந்நிய நேரடி முதலீடு பெற்றதில் விதிமீறல் செய்துள்ளதாகவும்,  இதே காலகட்டத்தில் அந்நிய  நேரடி முதலீடு என்ற பெயரில் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சுமார் ₹ 9,754 கோடியை பைஜூஸ் நிறுவனம் அனுப்பியுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.    2020-21 ம் ஆண்டுக்கான நிதி விவரங்கள் மற்றும்  கணக்குகளை பைஜூஸ் நிறுவனம் சமர்ப்பிக்கவில்லை என்றும் புகார் அளிக்கப்பட்ட நிலையில், பைஜூஸ் நிறுவனம் வழங்கிய விவரங்களின்  உண்மைத் தன்மை ஆராயப்பட்டு வருவதாக அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

BYJU's

தனி நபர்கள் அளித்த பல்வேறு புகார்களின் அடிப்படையில் பைஜூஸ் நிறுவனம் மீது விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், புகார் தொடர்பாக பைஜூஸ் சி.இ.ஓ ரவீந்திரனுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர்  விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.  சோதனையில் குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்கள்,டிஜிட்டல் தரவுகள் கைப்பற்றப் பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கும் நிலையில்,  விசாரணையின்போது அதிகாரிகளுடன் முற்றிலும் வெளிப்படைத்தன்மையுடன் இருந்ததாகவும்,  அவர்கள் கோரிய அனைத்து தகவல்களையும் வழங்கியுள்ளதாகவும் பைஜூஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.