"இனி ஃபுட் குவாலிட்டி தான் ஃபர்ஸ்ட்" - போராட்டத்தால் திடீர் முடிவு... பாக்ஸ்கான் பரபர அறிக்கை!
சமீபத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். நிறுவனத்தின் விடுதியில் தரமற்ற உணவு வழங்கியதே காரணம். காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் பாக்ஸ்கான் நிறுவனம் தான் அது. ஆப்பிள் ஐபோன்கள் இங்கு தான் இறுதி வடிவை எட்டுகின்றன. ஆகவே இதில் ஆப்பிள் நிறுவனத்திற்கும் பங்குண்டு. இங்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் பல்வேறு இடங்களில் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டு அங்கிருந்து அவர்கள் பணி புரியும் தொழிற்சாலைக்கு சென்று வந்தனர்.
ஒரு விடுதியில் தங்கியிருந்த பெண் ஊழியர்கள் சாப்பிட்ட உணவில் ஏற்பட்ட நச்சுத்தன்மையால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் பூந்தமல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிலர் உயிரிழந்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது. இதனால் சந்தேகமடைந்து விடுதியில் உணவின் தரம் மற்றும் குறைபாடுகளைக் களையக்கோரி கடந்த 18ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சர்கள், ஆட்சியர் நடவடிக்கை எடுப்போம் என வாக்குறுதி கொடுத்ததாலும், யாரும் உயிரிழக்கவில்லை என தெரிந்தபின்னும் போராட்டதை நிறுத்திக் கொண்டனர்.
மேலும் அரசு தரப்பில் பாக்ஸ்கான் விளக்கமளிக்க வேண்டும் என்றும் உணவின் தரம் ஆகியவற்றை உறுதிசெய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டது. தற்போது இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாக்ஸ்கான், "பாக்ஸ்கானின் ஸ்ரீபெரும்புதூர் ஆலை சார்ந்த இடங்களில் அடிப்படை வசதி குறித்து ஆய்வு செய்துள்ளோம். அதில் குறைபாடுகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளோம். கூடுதல் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள அதிகாரிகளை அனுப்பியுள்ளோம். எங்களது சப்ளையர்களின் சேவை உயர்தரமாக இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம்.
நிறுவனத்தின் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கும் முன்பாக தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்படும். அனைத்து ஊழியர்களுக்கும் தொடர்ந்து ஊதியம் வழங்கப்படும். ஊழியர்கள் பணிக்குத் திரும்பும்போது அவர்களுக்குத் தொடர்ந்து ஆதரவை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். நாங்கள் எங்கள் உள்ளூர் நிர்வாகக் குழு மற்றும் எங்கள் நிர்வாக அமைப்புகளை மறுசீரமைக்க உள்ளோம். இனி தரத்தில் எங்கள் கவனம் இருக்கும். உயர்தரத்தை அடையவும் பராமரிக்கவும் முடியும் என நாங்கள் நம்புகிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.