ஒடிசாவில் ரயில் சேவை சீராகும் வரை இலவச பேருந்து சேவை - முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவிப்பு

 
Naven Patnaik

ஒடிசாவில் ரயில் சேவை சீராகும் வரை பூரி, புவனேஸ்வர், கட்டாக் ஆகிய இடங்களிலிருந்து கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்படும் என முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். 

ஒடிசாவின் பாலாசோர் மாவட்டம் பகனாகா பஜார் அருகே நேற்று முன் தினம் இரவு பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சென்னை நோக்கி வந்த  கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் அதிகளவில் சேதமடைந்த நிலையில், அதில் பயணித்த பயணிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுவரை ஒடிசா ரயில் விபத்தில் 290க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.  தொடர்ந்து அந்த பகுதியில் விபத்தில் உருகுலைந்த பெட்டிகள் மற்றும் தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சீரமைப்பு பணியில் 7 பொக்லைன் இயந்திரங்கள், 140 டன் திறன் கனரக கிரேன் உள்ளிட்ட இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.  தொடர்ந்து நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளால் ஏராளமான ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.  

இந்நிலையில், ஒடிசாவில் ரயில் சேவை சீராகும் வரை பூரி, புவனேஸ்வர், கட்டாக் ஆகிய இடங்களிலிருந்து கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்படும் என முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். பாலசோர் வழித்தடத்தில் ரெயில் சேவை சீராகும் வரை கொல்கத்தாவுக்கு கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்படும். பூரி, புவனேஸ்வர், கட்டாக்கிலிருந்து கொல்கத்தாவுக்கு தினந்தோறும் 50 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.  இதனிடையே ரெயில் விபத்து ஏற்பட்ட இடத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள் குறித்து ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்-கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.